Monday 17 September 2012

திமிர் பிடித்த காதல்காரியும் அவளுக்கே சொந்தமான கவிதைக்காரனும்...!

திரட்டிய மீசைக்குள்
திமிரடங்கா பாரதியின்
நெஞ்சம் தன் வேலி எனக்கொண்டவன்...!

தோற்கப் பிடிக்காத
விழுப்புண் குழந்தையவன்...!
போதுமென்று நின்றுவிடாத
அகராதியில் அவன் பெயரிருக்கும்...!

சவால்களின் ருசியறிந்தவன்...!

உன் ஆணவமான ஆண்மை பிடிக்கும்...!
அரிந்து செல்லும் ஒற்றை வினாடி
பார்வையின் கூர்மை பிடிக்கும்...!
உன் மௌனம் சிந்தும் வார்த்தைகள் பிடிக்கும்...!
உன் கண்களில் தெறிக்கும் அந்த திமிர் பிடிக்கும்...!

என்னில் உன்னை விழ வைக்கிறேன்...
சாவாலுக்குள் நுழைவாயாயென
விரல் சொடுக்கி கண்நோக்கினாள் காதல்காரி...!



என்னில் உணர்ந்ததை
எழுத்தில் விளம்பும் காதல்காரி...

எண்ணத்தில் விளைந்ததை வார்த்தைக்குள்
அறுவடையாக்கும் காரிகைக்காரி..!
விரல் சொடுக்கி விசிலடிக்கும் 
திமிருக்குச் சொந்தக்காரி...!

பால் பேதமெல்லாம் யாதுமறியாத
பயமறியா இளங்கன்று..!
எதிர்த்து நின்று நேருக்கு நேர்
மல்லுக்கட்டும் வீம்புக்காரி...!



வீண் பேச்சு வம்பர்களின் வம்புகளை
நெருப்பு துண்டங்களாய்
எரிக்கத் துணியும் துணிச்சல்காரி...!

தோற்கப் பிடிக்காத தென்கடல்
சீமையின்... பிடிவாதக்காரி...!

நீ திமிர் பிடித்தவள்...!
நான் திமிருக்கு திமிர்பிடித்தவன்..!
தீர்த்துகொண்டு அறிவித்துக்கொள் 
யார் வென்றாரென...!
மோதல் கட்டம்...! 
மோகமாய் போகுமென அறியாதவராய்...!



வடக்கும் தெற்கும் வஞ்சிப்பதேது..!
மாறாய் கொஞ்சிக்கொண்டது...!

விலக்கும் விசையெல்லாம் காந்தப்புலம் மாறினால்
ஈர்த்துப்போகுமென.. எழுதி வைத்த அறிவியல்...!
அவளுக்கும் அவனுக்கும் விதிவிலக்காமல்...!
வேடிக்கை காட்டியே போனது...!

இங்கே எதிரெதிர் துருவங்களாய்
வார்த்தைகள் முட்டிக்கொண்டிருக்க
காதல்காரியும் கவிதைக்காரனும்
கவிதைக்குள் கனமழையாய் நனைந்து கிடக்க..!

ஆதவனின் கரங்களுக்கு ஈரம் துவட்ட நேரமில்லை..
அடங்க மறுத்த வெண்ணிலவு
பிறையானபோதும்...
ஒளிந்துகொண்டே வேவு பார்க்க..!
ஆளில்லா கானகம்,
காதல் ஊற்றினால் செழித்துக்கிடக்க..!
ஆடுகள் மேயும் அருகம்புல்லாய்ப்போனாள் காதல்காரி..!




அதிகாலை நேரத்திலே
பெரும் ஊடல் ஒன்றின் முற்றுப்புள்ளியாய்
காதலின் மடியிலே கவிதைக் குழந்தை பிறந்தது,
மாறாத் திமிரோடு...!

என்னிடத்தில் உன்னை ஈர்த்தக்கதை
யாதென உரைப்பாயா?
கண்கள் காணும் திசையெல்லாம்
கவிதைக்காரனின் வார்த்தைகளை
கவர்ந்திழுக்க தயாராகிறாள் காதல்காரி...!

உன் கண்கள் சிந்திய கண்ணீர் என்னை கரைக்கவில்லை...!
கண்ணாடி துறந்த உன் கண்கள் கரைத்ததடி...!
அழுது சாதிக்கும் உன் பிடிவாதம் வெல்லவில்லை
எதிர்த்து நின்று நீ அடுக்கிய கேள்விகளில் சாய்த்ததடி...!

யாருனக்கு பெயர் வைத்தார்?
அநேகமாய் ஓர் வரலாற்றுப்பிழைக்கு
காரணமாய் அவரிருக்கக்கூடும்...!
முன்னோ பின்னோ அடை மொழி கூட்டி...!
ஜெகபாரதி , யுகபாரதி என்றல்லவா
உன்னில் பெயரிட்டிருக்க வேண்டும்..!

அத்தனை திமிரும் மொத்தமாய் உன்னிடம்...!

“ச்சீ” யென ஒன்றை வார்த்தையில் தெறிக்கும், கோபம்!
சிலிர்க்கவைக்கும்..

எத்தனை திட்டி உன்னை விலக்க நினைத்தாலும்
என்னை இறுக்கிப் பிடித்த உன் திமிர்...
அதுவே... உனக்குள் என்னை மூழ்கடித்த திமிர்...!

“போடி” என்றவுடனே ஓடி ஒளிந்துக்கொள்ளும் நீ...
சேவல் கூவுமுன்னே காலை சுற்றிட வருவாய்...!

இருக்கும் நான்கு இதய அறைக்குள்
எவ்வறையில் ஒளித்திட்டாய் என்னை?
இப்படி பூனைக் குட்டியாய் எனை மாற்றி
உன்னை சுற்றி வர செய்கிறாயே?

பெருமூச்சு விட்டவனின் கழுத்தைக் கட்டி
நெற்றியில் முத்தமிட்டவள்
தொடர்கிறாள் மீதிக் கதை...!

எனக்கு பிடித்த உன்னை பட்டியலிடவா?

உன் மேல் உனக்குண்டான கர்வம்...!
நான் உனக்கு சொந்தமானவள்
என்ற திமிர்...! தனித்துவமாய்...தரணி ஆளும் தன்னிகரில்லா தலைவனாய்..
எண்ணிச்சிலாகிக்கும் உன் திமிர்...!
வசீகரிக்கும் கவிதைக்காரனாய் திமிர்...!

நீ திமிர் பிடித்தவனா?

அந்த போர்வைக்குள் இருக்கும்
முரட்டுக் குழந்தையடா நீ...!
உன் முகத்தில் ஒரு திமிர் இருக்கும்...!
உற்று நோக்கினால் ஆயிரம் ஏக்கங்களின்
இருட்டுப்பக்கம் அதில் பூட்டப்பட்டுக் கிடக்கும்...!

கவிதைக்காரா... யாரிடத்தும் அக்கறையில்லையென
உன் வாய் சொல்லலாம்...!
ஆனால்... உன் நேசத்துள் வீழ்ந்தவர்கள்
மேலான அக்கறை உன் இதயச் சுவர்களில்
மோதி வெளிவரத் துடிக்கும் மாயம் அறிவாயா?

உன் திமிருக்குள் ஒளிந்திருக்கும் என் மேலான
நேசம் அறியாதவளா நான்?

பிரியமானவளே...! என்னுள் நீ முழுதாய்
நிறைந்தாய்யென அறிவித்தால் தான் அறிவாயா?
ஒற்றைகல் உப்பின் அளவு பிடிக்குமடி உன்னை...!
அதனிலிருக்கும் ஓராயிரம் அணுக்களும்
உன்னை என்னுள் விதைத்துச் செல்லும்...!

அழக்கூடாதடி நீ...! உன் கண்கள் சிந்தும்
கண்ணீர்த்துளிகளின் ஒற்றை துளியில் கூட
என் நேசம் சுமந்த உப்பிருக்கும்...!

இவர்களின் உரையாடல் நீண்டு கொண்டேயிருக்க
திமிருக்கும் திமிர் பிடித்த அதன் வேலிக்குமிடையில்
காதல் ஒன்றும் புரியவில்லை சரிதான் போ..!
என சலித்தோய்ந்து உறங்கி விட்டது...!

விடியலுக்கு சற்று முன்.....!

2 comments:

  1. கவிதைக்குள் ஒரு காதல் கதையே கண்களில் தெரிகிறது... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஒரு ஆழ்ந்த காதலின் படிமங்கள் சிந்தாமல், சிதறாமல், சிதையாமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வார்த்தை இணைப்புகளிலும் , பிணைப்புகளிலும் நவீனத்துவம் மிளிர்கிறது. ஜடங்களை கூட காதலித்துப்பார் என்று நரம்புகளில் முறுக்கேற்றும் தங்கபஸ்ப வரிகள். ஒரு காதல் காட்சி இக்கவிதையில் மிக அழகாக படமாக்கபட்டிருக்கிறது. மிக சிறந்த காதல் கவிதை...

    ReplyDelete