Saturday 15 September 2012

எனக்குள் ஏனோ தடுமாற்றம்...!

கலைந்து விழும் கற்றை முடி
நடுவே சிக்கிக் கொண்ட ஐவிரல்களாய்
உன் இதயத்து அறைகளில்
பூட்டி வைத்து தடுமாறச் செய்கிறாய்...!

என் கண்கள் சிந்தும்
கண்ணீர் துளி ஒவ்வொன்றையும்
காதல் செய்தே கொல்லப் பார்க்கிறாய்...!

உன் நினைவலைகளால் என்னை சுருட்டி, 
உன்னில் என்னை மூழ்கடித்து 
என் சுவாசம் தடுத்து 
மூச்சிரைக்க வைக்கிறாய்...!

செல்லச் சிணுங்கல்களும்
சீண்டும் உதட்டோர புன்னகையும்
கலந்து தந்தே கெஞ்சப் பார்க்கிறாய்...!

மோனப் பார்வையால் கிறங்கடித்து
கண்வழி ஊடுருவி
மீசை முடி குறுகுறுக்க
கிச்சு கிச்சு மூட்டியே கொஞ்சப் பார்க்கிறாய்...!

பூக்கள் உதிரும் நந்தவனத்தில்
பூவாய் மாறி ஸ்பரிசித்து
என்னை நினைவிழக்கச் செய்தே
மிஞ்சப் பார்க்கிறாய்...!

என்னுள் நீ புகுந்து ஆழ்மனம் தரிசிக்க
நீ நானாகவும், நான் நீயாகவும்
மாற்றி மாற்றி தடுமாற வைத்து
உன் காலடி சுற்றும் பூனைகுட்டியாய்
உருமாற வைக்கிறாய்...!

No comments:

Post a Comment